அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2.70 கோடி நிலம் மீட்பு: 2 வீடுகள், குடோனுக்கு சீல்

 

சென்னை, ஜூன் 16: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு, ஜெய்பீம் நகரில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பலர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கோயில் நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டி லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு வருவதாகவும், மேலும் இந்து சமய அறநிலைத்துறைக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகையை சரிவர செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகவும் இந்து சமய அறநிலை துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில், தாசில்தார் கவிதா, செயல் அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெய்பீம் நகருக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர். அப்போது அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகையை செலுத்தாத 2 வீடு மற்றும் பந்தல் கடை, குடோனுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

இதில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் ஒரு சில வீடுகளுக்கு சென்று மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது அளவுக்கு மீறி வரிசையாக வீடுகள் கட்டி லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதனால் அவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விரைவில் 325 வீடுகளையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் கூடுவாஞ்சேரியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: