சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, கடுமையான இதயத் துடிப்பு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த 73 வயது மூதாட்டிக்கு ஒரு உயிர்காக்கும் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. மூத்த ஆலோசகர், இதய நோய் நிபுணர் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் மருத்துவர் கார்த்திகேசனால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது தமிழ்நாட்டின் முதல் ‘பல்ஸ்டு பீல்டு அப்லேஷன்’ சிகிச்சை முறையாகும்.
இதுகுறித்து இதயநோய் நிபுணர் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் கார்த்திகேசன் கூறியதாவது:
பல்ஸ்டு பீல்டு அப்லேஷன் என்பது ஒரு மிக குறைந்த ஊடுருவக்கூடிய சிகிச்சை முறையாகும். இது அசாதாரண இதய துடிப்பை ஏற்படுத்தும் இதய திசுக்களை மட்டுமே மிக குறுகிய மின் தூண்டுதல்களைப் பயன்படுத்தி துல்லியமாக இலக்கு வைக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள ஒரு நரம்பு வழியாக இதயத்திற்குள் செலுத்தப்படும் ஒரு மெல்லிய வடிகுழாயை கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.
இது வழக்கமான அப்லேஷன் முறைகளுடன் ஒப்பிடும்போது, நோயாளி மிக விரைவாக குணமடையவும், அவரது பாதுகாப்பை மேம்படுத்தவும் வழிவகுக்கிறது. தற்போது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மூதாட்டியின் இதய துடிப்பு வெற்றிகரமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இது அவரது நோய் அறிகுறிகளையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
