மும்பை: பிரபல மாடல் அழகி ஹர்ஷா சன்னி ரூ.11.82 கோடி கஞ்சாவுடன் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார். மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான ஹர்ஷா சன்னி(29), தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடந்த மிஸ் கேரளா அழகி போட்டியில் பங்கேற்று 2வது இடம் பிடித்தவர். நேற்று அதிகாலை பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானத்தில் ஹர்ஷா வந்திறங்கினார். வழக்கம்போல பயணிகளின் உடமைகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ஹர்ஷா மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அவரை சோதனைக்கு உள்ளாக்கினர். அப்போது ஹர்ஷாவின் பையில் ரூ.11.82 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைபொருள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுபற்றி ஹர்ஷாவிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது பையில் எப்படி கஞ்சா வந்தது தெரியாது என்று கூறினார். இதையடுத்து ஹர்ஷாவை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.
