×

வீட்டிலிருந்த நகைகள், பணம் ஆகியவற்றை லைவில் யூடியூபில் ‘பந்தா’ காட்டிய பெண் வீட்டில் கொள்ளை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

 

சிவபுரி: தனது சொகுசு வாழ்க்கையை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் யூடியூபர் வீட்டில், பல லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் மோகினி கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் ரச்சனா குர்ஜார் என்பவருக்கு, சமூக வலைதளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். ரச்சனா தனது யூடியூப் பக்கத்தில் தனது வீடு, வைத்திருக்கும் தங்க நகைகள், கட்டுக்கட்டான ரொக்கப் பணம் மற்றும் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை வீடியோவாகப் பதிவிட்டு வந்தார்.

ஒரு வீடியோவில் வீட்டின் நுழைவாயில் முதல் அறைகள் வரை அனைத்தையும் காட்டியதுடன், மற்றொரு வீடியோவில் மேஜை மீது நகைகளையும் பணத்தையும் அடுக்கி வைத்துப் படம் பிடித்துள்ளார். ஆன்லைனில் இவர் காட்டிய இந்த ஆடம்பரம், கொள்ளையர்களுக்கு வாய்ப்பாக மாறிப்போனது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரச்சனா குர்ஜாரின் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டினர். பின்னர் அங்கிருந்த 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் மற்றும் எனர்ஜி டிரிங்க் கார்டன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

அதிகாலை 4 மணி அளவில் கண்விழித்த குடும்பத்தினர், அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தங்களின் அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : YouTube ,Madhya Pradesh ,Shivpuri ,Mohini ,Shivpuri district ,Madhya Pradesh… ,
× RELATED திரிணாமுல் காங்கிரசில் அரசியல் மோதல்;...