கிளை நூலகத்தில் கழிப்பறை வசதி செய்து தர நடவடிக்கை

திருச்செங்கோடு, ஜூன் 9: எலச்சிப்பாளையம் கிளை நூலகத்தில், கழிப்பறை வசதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளையம் ஒன்றியம், காவல்நிலையம் பின்புறம் சுமார் 13 சென்ட் பரப்பளவில் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்பேரில், நாமக்கல் சின்ராஜ் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2023-24ம் ஆண்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய மாவட்ட கிளை நூலகம் கட்ட நடவடிக்கை எடுத்தார். அதன்படி, எலச்சிப்பாளையத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலமாக 50 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது வரை நூலகத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாத நிலை உள்ளது. கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு இடவசதியும், செப்டிக் டேங்க்கும் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வாசகர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நூலகத்திற்கு வரும் வாசகர்களின் நலனுக்காக சுகாதார வசதி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: