சென்னை: சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் தென் மாநிலங்களில் உள்ள சில விமான நிலையங்களில் அதுபோன்ற வசதிகள் இல்லை. இதனால் இந்தியாவின் தென் மாநில பயணிகள் பலர், விமானங்களில் சென்னைக்கு வந்துவிட்டு, சென்னையில் இருந்து டிரான்சிட் பயணிகளாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதோடு மட்டுமின்றி வெளிநாட்டு குடியுரிமை பயணிகள் பலர் சென்னை விமான நிலையம் வழியாக டிரான்சிட் பயணிகளாக பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்த டிரான்சிட் பயணிகள், சென்னை விமான நிலையத்திற்குள் பல மணி நேரம் தங்கி இருந்து கொள்ளலாம். ஆனால் பாஸ்போர்ட், விசா பிரச்னை காரணமாக, அவர்கள் விமான நிலையத்தை விட்டு, வெளியில் எங்கும் செல்ல முடியாது. இவ்வாறு டிரன்சிட் பயணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக, விமான நிலையத்துக்கு உள்ளேயே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் டிரான்சிட் பயணிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய போதுமான ஓய்வு கூடம் இல்லை. இதனால் டிரான்சிட் பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில், புதிதாக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் டெர்மினல் 3ல் டிரான்சிட் பயணிகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக, சுமார் 10 சூட் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு பிரபல தனியார் நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவாகியுள்ளது.
