பாட்னா: பீகாரில் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு அரசு வழங்கி வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்கப்படும் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு பிரிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோருக்கு அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி வந்தது.
இந்நிலையில் இசட் பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படுகின்றது. அவர்களுக்கு இனி பீகார் சிறப்பு ஆயுதப்படை பாதுகாப்பு அளிக்கும்.
தற்போது இரண்டு ஆர்ஜேடி தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆயுதப்படையை சேர்ந்த 2 முதல் 8 வரையிலான பாதுகாவலர்கள், பாட்னா மாவட்டப் படையை சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்கள் ஒரு பைலட் வாகனம், 2 குண்டு துளைக்காத கார் ஆகியவை அடங்கும். லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவிற்கான ஒய் பிரிவு பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவிற்கு வழங்கப்பட்டுவந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு திரும்ப வழங்கப்படுகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
