புதுடெல்லி: அரசின் பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு அளிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்கும் வகையில் அரசு பத்திரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகளுக்கு மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. உலகளாவிய முதலீட்டில் முன்னிலை வகிப்பதிலும், மூலதனச்சந்தையை ஆழப்படுத்துவதிலும் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப ஒன்றிய நிதியமைச்சகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அரசு பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பெறப்படும் வட்டி மற்றும் முதலீட்டு லாபத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதே போன்ற விதிவிலக்கு சர்வதேச தீர்வுகளுக்கான வங்கிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்த அதிரடி வரி சலுகைகள் அமைய உள்ளதாகப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
