×

காக்களூர் ஏரியில் கழிவுநீர் கலப்பு; கொத்து, கொத்தாக மீன்கள் இறப்பு: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி அமைந்துள்ளது. சுமார் 194 ஏக்கர் பரப்பளவு, 2682 மீட்டர் நீளமும் 4 மதகுகள், 2 கலங்கள்கள் கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வந்துள்ளது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை ஒட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவானது.

கடந்த வருடம் இந்த ஏரியில் மேம்பாட்டு பணி, ஊரக வளர்ச்சி துறை மற்றும் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பில் நடைபாதை, இரும்பு தடுப்பு, பார்வையாளர்கள் பார்வையிடும் வகையில் பூங்கா உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்தநிலையில் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து காக்களூர் ஏரியில் கொட்டுகின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால் ஏரிக்குள் கலந்து விடுகின்றனர். இதனால் காக்கலூர் ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைந்து விட்டது. கடந்தாண்டு பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கரையோர பகுதிகளில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியில் நடை பயிற்சிக்காக வருபவர்களுக்கும் மற்றும் வேடிக்கை பார்க்க வருகைத் தரும் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ஏரிக்குள் கலக்காதவாரும், பல்வேறு இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்கவும் நடவடிக்கை வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Tags : Lake Kakalur ,THIRUVALLUR ,LAKE KAKALOOR ,THIRUVALLUR CITY ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...