×

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

அருள் தரும் ஆன்மிகம் இதழின் அட்டைப்படத்திலேயே ‘நரசிம்மரை’ தரிசிக்க வைத்ததற்கு நன்றி. பாராட்டுக்கள்.
– கா. சித்ரா காமராஜ், கோவை.

அருளைத் தரும் நரசிம்மர் ஜெயந்தி, பொருளைத் தரும் அட்சய திருதியை இரண்டு திருநாட்களையும் இணைத்து அவற்றின் மகத்துவங்களையும், அரிய இறை தகவல்களையும் முப்பது முத்துக்களாகத் தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரை வெகு அற்புதம்! நரசிம்மர் ஜெயந்தி பற்றிய கட்டுரை நெஞ்சுக்கு நிம்மதியையும், அட்சய திருதியை பற்றிய கட்டுரை மனதுக்கு மகிழ்ச்சியையும் அள்ளித் தந்து பரவசத்தில் ஆழ்த்தி விட்டன. சித்ரா பெளர்ணமி பற்றிய தகவல்கள் சிறப்பானவை.

தமிழ் நாட்டின் தொன்மையான விநாயகர் வீற்றிருக்கும் ‘ஆலகிராமம் பிள்ளையார்’ ஆலயம் பற்றி அரிய தகவல்களும் அற்புதமான சிற்பங்களும் கண்டு தரிசித்து ஆச்சரியப் பரவசம் அடைந்தேன். ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு அவர் அருளிய அத்வைத தரிசனத்தின் அற்புதங்களை விவரித்த கட்டுரையும், வண்ணப்படமும் வெகு அருமை. அவரது அவதாரத் திருநாளுக்கு மகத்துவம் சேர்த்து விட்டது.
– த. சத்தியநாராயணன், அயன்புரம்.

முத்துக்கள் முப்பது வரிசையில் நரசிம்மர் ஜெயந்தியும், அட்சய திருதியையும். அட்சய திருதியை பற்றி ஏராளமான செய்திகள், என்ன பொருள், அன்று என்ன செய்ய வேண்டும் என்ற விஷயத்தை எங்களுக்கு வாரி இறைத்தது அற்புதம். சிற்பமும் சிறப்பும் வரிசையில் ஆலகிராமம் பிள்ளையார். தமிழ்நாட்டின் தொன்மையான விநாயகர். கோயிலின் முகப்பு வாசலை வண்ணப்படமாக தந்தது சிறப்பிலும் சிறப்பு.

கல்வெட்டு சான்றுகள், சிறப்பு தோற்றம், அமர்ந்த சிலை இப்படி பல்வேறு விஷயங்களை தந்தது மறக்க முடியாதது. ‘அறுபது படிகள் இறங்கினால் ஆறுமுகனை தரிசிக்க முடியம்’ வியப்பாக இருந்தது. ‘அடேங்கப்பா…’ மெய் சிலிர்த்தது. படித்து முடித்ததும் கோயிலை வலம் வந்த திருப்தி ஏற்பட்டது. நம்மைத் தாக்கும் சோம்பல் தலையங்கம் கண்டேன். சாதாரணமாக சோம்பல் படுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை அலசி ஆராய்ந்தது அருமை. இதற்கு ஒர் உதாரணம் கும்பகர்ணன். நல்ல போர் வீரன் சோம்பலால் என்ன பாதகம் என்பதை விவரித்துக் காட்டியது சூப்பர்.
– வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நரசிம்மர் ஜெயந்தி பக்தி ஸ்பெஷல் படத்துடன் சிறப்பாக இருந்தது. நம்மைத் தாக்கும் சோம்பல் – தலையங்கம் அற்புதம். என்றும் அன்புடன், ஆலகிராமம் பிள்ளையார், பழனி பிள்ளைத்தமிழ் கேள்வி-பதில், தனுஷ்கோடியில் மகான் என ஆன்மிக இதழ் அம்சமாக இருந்தன.
– AN. சிதம்பரம், விராச்சிலை.

ஆலகிராமம் பிள்ளையார் ஆலயம் இருக்கும் திக்கினைக் காட்டியிருந்த அருள் தரும் ஆன்மிகம் இதழிற்கு கோடான கோடி நன்றிகள்.
– இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அட்சய திருதியை அன்று எதைச் செய்யக் கூடாது; எதையெல்லாம் செய்யலாம் என்பதையும், ஜீவகாருண்யத்தையும், தான தர்மங்களையும் கடைப்பிடித்து செல்வந்தராகும் வாய்ப்பை அமையப்பெற்றிடலாம் என்பதை ஆன்மிகம் இதழ் நன்கு உணர்த்தி நன்னெறிப்படுத்தியது.
– எஸ்.பரமேஸ்வரன், திருவானைக்கோவில்.

அருளைத் தரும் நரசிம்ம ஜெயந்தியும் பொருளைத் தரும் அட்சயதிருதியையும் என்ற இணைப்பை முத்துக்கள் முப்பதாக்கியது. முப்பொழுதும் தப்பாமல் பிரார்த்திக்க அடிகோலியது! ‘நல்லன எல்லாம் நல்கிடும் லட்சுமி நரசிம்மர்! என்ற தொகுப்பும் தரிசனப் படங்களும் ஆன்மிகப் பலன் வாசகர்களுக்கு கிடைத்திருக்கும் பலம்! நரசிங்கபுரத்து தெய்வீகத் தொகுப்பு நெஞ்சுக்கு ஆறுதலானது.

நம்மைத் தாக்கும் சோம்பல்!’ என்ற பொறுப்பாசிரியர் தலையங்கம் மூலம் தோல்வி குறித்தும் + அறியாமை குறித்தும் எழுகின்ற பயங்களின் எதிரொலியே சோம்பலின் அடித்தளம் என்பதை விவரித்து உத்வேகப்படுத்தியிருப்பது உபயோகமானது. தமிழ் நாட்டின் தொன்மையான விநாயகர்! என்று ஆல கிராமம் பிள்ளையார் பற்றி சிற்பமும் சிறப்புமாகத் தந்த தொகுப்பு ஆறு பக்கத்தில் ஆனந்த பூந்தோப்பு.
– ஆர். உமா காயத்ரி, திசையன்விளை.

Tags : Narasimmar ,Ga. Chitra Kamaraj ,Govai ,Narasimmar Jayanti ,Atchaya Tirudhi ,
× RELATED சொன்னதைக் கேட்போம்! துயரம் விலகிப்போம்!