கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்கட்சிகள் கூறிவந்த நிலையில், தற்போது 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.45 உயர்ந்துள்ளது. இதன் மூலமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.57 உயர்ந்து ரூ.99.55 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2 நாட்கள் முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒருநாள் இடைவெளியில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலை ரூ.2.81 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 வரை இருந்த நிலையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடந்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக விலை உயராமல் நீடித்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக கடந்த 10 நாட்களில் மட்டும் 4-ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு இதுவரை காரணம் ஏதும் தெரிவிக்கவில்லை. கடந்த வாரம் பிரதமர் மோடி கூறுகையில், எரிபொருட்கள் விலை உயர்வு இருக்கும், இதன் காரணமாக அனைவரும் முடிந்த வரையில் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். வாகனபயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். பொதுபோக்குவரத்தை அதிகளவில் உபயோகிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: