திருவிடைமருதூர், மே 25: திருவிடைமருதூர் அருகே நூறாண்டு பழமையான புளியமரம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் குமரங்குடி ஊராட்சியில் உள்ள கீழாத்துக்குறிச்சி மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரத்திற்கு யாரோ சில மர்ம நபர்களால் சனிக்கிழமை மாலையில் தீ வைத்ததால் மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதனால் மரத்தின் கீழ்புறம் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், வியாபாரிகள் அச்சமடைந்தனர். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பல மணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். நூறாண்டு பழமை மிக்க புளியமரம் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
