கோயில் திருவிழாவில் 100 கிடாக்கள் 150 சேவல் பலியிட்டு கம,கம விருந்து: ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்

திருச்சுழி: நரிக்குடி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 100 கிடாக்கள், 150 சேவல்கள் பலியிட்டு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூரில் மாசாணசுவாமி கோயில் வைகாசி மாத பொங்கல் உற்சவ திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மாசாண சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மறையூர் மந்தையம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட மாசாண சுவாமி, அரியசாமி, வீரபத்திர சுவாமிகள் கோயிலை வந்தடைந்தன. இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

இதையடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட கிடா மற்றும் 150 சேவல்கள் பலியிட்டு 60 மூட்டை அரிசியில் கறி விருந்து தயாரிக்கப்பட்டு சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதன்பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருவிழாவில் பெண்கள் பங்கேற்பது கிடையாது. மாசாண சுவாமியை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Related Stories: