தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம் – நோயாளிகள் கடும் அவதி

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் படுக்கை அறைகள் மற்றும் வார்டுகளில் எலிகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகின்றன.

அரசு மருத்துவமனையில் எலி தொல்லையை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருவதாக தேனி மாவட்ட மக்கள் கூறி இருக்கிறார்கள். ஆண்டிபட்டி அருகே இருக்கும் க.விலக்கில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது.

இந்த மருத்துவமனையில் மொத்தம் 604 வாா்டுகள் உள்ளன. இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளியாகவும், 2,000-க்கும் மேற்பட்டோா் வெளிநோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மருத்துவமனை நோயாளிகளின் அறையில் எலிகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. எலிகளின் அட்டகாசம் காரணமாக ஏற்கனவே சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கும், அவர்களுக்கு துணையாக இருக்கும் உறவினர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மேலும் ருத்துவமனையில் போதிய தூய்மையும் சுகாதாரமும் இல்லாததே எலிகளின் பெருக்கத்திற்கும் அவற்றின் தொல்லைக்கும் முக்கியக் காரணம் என நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியுள்ள உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மருத்துவமனையை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் சுற்றித்திரியும் எலிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Related Stories: