கெங்கவல்லி, மே 14: கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், பச்சமலை ஊராட்சி வேப்படி பாலக்காடு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி வந்த 3 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று, சிவக்குமார் என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதைப் பார்த்த சிவக்குமார் உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், தீயணைப்புத்துறை வாகனம் வேறு அவசர பணிக்கு சென்று விட்டதால் உடனடியாக வர முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னமணி பிரேம்குமார் அப்பகுதி விவசாயிகள் உதவியுடன் கயிற்றின் மூலமாக கிணற்றில் இறங்கி மானை மீட்டு மேலே கொண்டு வந்தார். பிறகு, கெங்கவல்லி வனச்சரக அலுவலர் கமலக்கண்ணனிடம் மானை ஒப்படைத்தனர். வனத்துறையினர் மானுக்கு முதலுதவி அளித்து, வனப்பகுதியில் விடுவித்தனர்.
