ரூ.33.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

 

சேலம், மே 12: சேலத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், நேற்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 258 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் அளித்த 2 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.59 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டரும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.16 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி என மொத்தம் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.75 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். இதில், டிஆர்ஓ ரவிக்குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சின்னுசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: