×

திருவெறும்பூர் அருகே தீயில் கருகிய வக்கீல் அலுவலகம்

திருவெறும்பூர், மே 7: திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டை அண்ணா நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மணிமேகலை (39). வழக்கறிஞர். இருவரும் அப்பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் அலுவலகம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றவர்கள், நேற்று காலை அருண் அலுவலகம் வந்தார்.

அப்போது அறையில் இருந்த சேர், டேபிலில் உள்ள ஆவணம் எறிந்து தீக்கிரையாகி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அருண் தனது மனைவி மணிமேகலைக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் மணிமேகலை சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு, இதுகுறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்தார். துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு, தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

மேலும், திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அலுவலத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன? மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து ஆவணங்களை எரித்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் துவாக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Thiruverumpur ,Vazhavanthan Kotta ,Anna Nagar Main Road ,Thiruverumpur, Trichy district… ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறித்த 2 வாலிபர்களுக்கு தலா ஓராண்டு சிறை