திருத்துறைப்பூண்டி,மே 7: திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அத்திமடை, பாமணி கிராமங்களில் கடந்த 15 தினங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அத்திமடை கடைவீதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி-நாகப்பட்டினம் சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
