சென்னிமலை, மே 7: சென்னிமலை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் நேற்று பொங்கல் விழா நடந்தது.
சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள அர்த்தனாரிபாளையத்தில் கருப்பண்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பல்வேறு நீர் நிலைகளில் இருந்து கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்தனர்.
பின்னர், நேற்று திரளான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, கருப்பணசாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல, ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் உள்ள மசினி அம்மன் கோயில், ஏரிக்காட்டில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.
