*அதிகாரிகள் தகவல்
மூணாறு : மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் நடந்த கணக்கெடுப்பில் புதிதாக 100 வரையாடுகள் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்குவது இரவிகுளம் தேசிய பூங்காவாகும்.
இங்கு வரையாடுகள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் தலைமை வனவிலங்கு காப்பாளர் பிரமோத்ஜி கிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி வரையாடு கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
இந்த பணி ஏப்ரல் 27ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றன. வனப்பகுதியைத் தொகுதிகளாகப் பிரித்து, இரு வனத்துறை அதிகாரிகள், சமூக வனவியல் பட்டதாரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு பிரிவாக பிரிந்து ஆணை முடி, ராஜமலை, வரயாடுமேடு, மேஸ்திரிகெட்டு போன்ற வனப்பகுதிக்கிளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பின் மூலம் புதிதாக 100 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.மூணாறு வனவிலங்கு காப்பாளர் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு, வரையாடுகளின் துல்லியமான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு ராஜமலையில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட வரையாடுகள் இருந்தன. அதில் 114 குட்டிகள் புதியதாகப் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
