அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கண்டனம்

டெல்லி: அமெரிக்க அதிபர் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று இரவு (ஏப்ரல் 25, 2026) நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆண்டு விழா விருந்தின் போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினர் மிக வேகமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு அசம்பாவிதங்களைத் தடுத்ததாகப் பாராட்டியுள்ளார். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடந்த போது விழா அரங்கில் பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் பீதியடைந்து சிதறி ஓடினர். பாதுகாப்பு கருதி அதிபர் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வினால் நிகழ்ச்சியின் மகிழ்ச்சியான சூழல் முற்றிலும் மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட இந்த விழா அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதியடைகிறேன். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: