×

தந்தையல்ல என நிரூபித்தால் ஜீவனாம்சம் தரமுடியாது; திருமணமான தம்பதிக்கு குழந்தை பிறந்தாலும் ‘டிஎன்ஏ’ முடிவே இறுதியானது: ெபண்ணின் மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: திருமணமான தம்பதிக்கு குழந்தை பிறந்தாலும் டிஎன்ஏ முடிவே இறுதியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு பெண், தான் 3 ஆண்டுகள் பணியாற்றிய வீட்டில் இருந்த நபருடன் உறவில் இருந்து பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அடுத்த மாதமே அதாவது 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தை அணுகினார். தனக்கும் தனது குழந்தைக்கும் மாதம் 25,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கக் கோரி அவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அந்த நபரின் கோரிக்கையை ஏற்று டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில், அந்த நபர் குழந்தையின் உண்மையான தந்தை இல்லை என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவர் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தன. இந்தியச் சாட்சியச் சட்டத்தின் 112 பிரிவின் கீழ் திருமணமான காலத்தில் பிறக்கும் குழந்தை சட்டப்பூர்வமானது எனக் கருதப்பட்டாலும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அது பொய்யென நிரூபிக்கப்பட்டால் அந்தச் சலுகை செல்லாது என நீதிமன்றங்கள் தெரிவித்தன. இந்நிலையில் ேநற்று இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே.சிங் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு குழந்தைக்கு அந்த நபர் (குற்றம்சாட்டப்படும் நபர்) உயிரியல் ரீதியான தந்தை இல்லை என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகு, அவரிடம் ஜீவனாம்சம் வழங்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. சட்டப்பூர்வமான திருமணத்தின் போது குழந்தை பிறந்திருந்தாலும், டிஎன்ஏ முடிவே இறுதியானது. இந்த வழக்கில் டிஎன்ஏ முடிவுகள் ஏற்கப்பட்டுவிட்டதால், மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனர். இருப்பினும், அந்த குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், அந்த குழந்தையின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் அடிப்படைத் தேவைகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை டெல்லி அரசு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

 

Tags : Alimony ,Ebn ,Supreme Court ,New Delhi ,
× RELATED சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...