அமித்ஷாவை வரவேற்க சென்ற அண்ணாமலை ‘நான் யார் என்று காட்டுகிறேன்’ என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல்: டாக்ஸி முற்றுகை மிரட்டலால் அதிர்ந்து போன அதிகாரிகள்

 

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் (18ம் தேதி) இரவு 11.35 மணியளவில் கோயம்புத்தூர் வந்தடைந்தார். அங்கிருந்து சென்னை வந்தார்.அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்த முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தன்னைப் போலவே ஒன்றிய அமைச்சரை வரவேற்க வந்திருந்து அனுமதி கிடைக்காமல் விமான நிலையத்தின் வெளியில் காத்திருந்த முன்னாள் விளையாட்டு வீரர் வேணுகோபால் வர்மா என்பவரை உள்ளே அனுமதிக்குமாறு விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி மனு மேத்யூ என்பவரிடம் அண்ணாமலை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

முன்னரே கடிதம் அளித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்று அதிகாரி கூறிய போது, அண்ணாமலை நான் கடிதம் தருகிறேன் உள்ளே அனுப்புங்கள் என்று கூறவே அதற்கு தலைமை பாதுகாப்பு அதிகாரி உங்கள் லெட்டர் எல்லாம் நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அண்ணாமலை, ‘இது உன் அப்பன் வீட்டு ஏர்போர்ட்டா?’ என கடுமையான வார்த்தைகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ‘நான் யார் என்று காட்டுகிறேன்’, ‘அடுத்த சம்பளம் வாங்க இங்க இருக்க மாட்ட’ போன்ற வார்த்தைகளில் அதிகாரியை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மாவட்டத் தலைவர் ரமேஷ் குமாரிடம் ‘நாளை அனைத்து டாக்ஸி டிரைவர்களையும் ஒன்று திரட்டி முற்றுகையிடச் சொல்லுங்கள், யார் என்ன செய்வார்கள் பார்க்கலாம்’ என மிரட்டும் விதத்தில் பேசியதை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரி மேத்யூ அவ்விடத்தில் இருந்து விலகியதாகவும், உடனே உள்துறை அமைச்சர் வந்த விமானம் தரை இறங்கிவிட்டதால் அவரை வரவேற்க சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: