×

சாத்தூர் அருகே ஆம்னி பஸ்- பைக் மோதல்; பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பலி: நள்ளிரவில் டீ குடிக்க சென்றபோது சோகம்

 

சாத்தூர்: சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் கோகுல் (17). இவர், சிவகாசியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில், கோகுலின் செல்போன் பழுதானதால், அதனை சரிபார்ப்பதற்காக உறவினரின் பைக்கில் நேற்று பிற்பகல் சிவகாசிக்கு சென்றார். அங்கு செல்போன் கடையில் பழுது நீக்க தனது போனை கொடுத்தார்.

கடைக்காரர், செல்போன் பழுதை சரிசெய்ய அதிக நேரமாகும் என கூறியதால், கோகுல் அங்கிருந்து புறப்பட்டு சிவகாசியில் தன்னுடன் படித்த வகுப்பு தோழர்கள் சீனிவாசன் மகன் பிரசன்னா (17) மற்றும் யுவராஜ் (17) ஆகியோரை சந்தித்தார். பின்னர், கோகுல் தனது நண்பர்களுடன் இரவு 9 மணியளவில் செல்போன் கடைக்குச் சென்று, பழுது நீக்கிய செல்போனை பெற்று கொண்டார். இதையடுத்து நண்பர்கள் மூவரும் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவு 11.45 மணியளவில் டீ குடிப்பதற்காக ஒரே பைக்கில் 3 பேரும், சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிசாலையில் சென்று கொண்டிருந்தனர். போக்குவரத்து நகர் அடுத்த காட்டுபள்ளிவாசல் பகுதியில் எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். தகவலறிந்து சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த 3 மாணவர்களின் பெற்றோரும், உறவினர்களும் சாத்தூர் மருத்துவமனையில் குவிந்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. டூவீலர் மீது ஆம்னி பஸ் மோதி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sattur ,Virudhunagar district ,Sivakasi… ,
× RELATED அவதூறு பேச்சு: அண்ணாமலைக்கு சேலம்...