நத்தம், ஏப். 14: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணி வகுப்பு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், அலுவலர்களுக்கான (1, 2, 3) இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வாக்குச்சாவடியின் விதிமுறைகள் பற்றி எடுத்து கூறி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டீன் சாந்தப்பா, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு கண்காணிப்பாளர் ராகவ் பாலாஜி, வட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார் உடனிருந்தனர்.
