×

அழகர்கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு கொட்டகை முகூர்த்தம் ஏப்.17ம் தேதி நடக்கிறது

மதுரை, ஏப். 14: அழகர்கோவிலில் நடைபெற இருக்கும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கொட்டகை முகூர்த்த விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கள்ளழகர் கோயில் இணை ஆணையர் ஹரிஹரன் கூறியதாவது: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். இந்தாண்டு இவ்விழாவின் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த விழா, ஏப்17ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 7.35 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சந்நிதியில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தமும், அதனை தொடர்ந்து ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரமும் நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெறும். அழகர்கோயிலில் சித்திரை திருவிழா, இந்தாண்டு ஏப்.27ம் தேதி துவங்குகிறது. முதல் இரண்டு நாட்களும் பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள், கோயிலை வலம் வருகிறார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, ஏப்.29ம் தேதி மாலை கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார். இதையடுத்து மே 1ம் தேதி காலை தங்கக் குதிரை வாகனத்தில் அழகர், வைகை ஆற்றில் இறங்குகிறார். பின், அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் செல்கிறார். அழகர்கோவிலில் இருந்து வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்திருக்கும் சுமார் 450க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டகப்படிகளில், அழகர் எழுந்தருளுகிறார். மண்டகப்படிகள் அமைப்பதற்கான முதல் நிகழ்ச்சியாக, கொட்டகை முகூர்த்த விழா நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kotakai Mukhurtham ,Chithirai festival ,Alagarkovil ,Madurai ,Kotakai Mukhurtham festival ,Kallazhagar Temple ,Joint Commissioner ,Hariharan ,Alagarkovil Kallazhagar Temple… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...