சிவகாசி, ஏப்.13: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. சிவகாசி தேரோட்டம் வழக்கமாக 3 நாட்களில் சிவகாசி ரதவீதிகளை சுற்றி நிலைக்கு வந்து சேரும். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் கோவில் அருகில் வந்த தேர் அங்கிருந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால் தேரை அங்கிருந்து நகற்ற முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.
தொடர்ந்து தேர் பராமரிப்பு குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு தேரை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். தேர் சிக்கிய பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தேர் சக்கரம் செல்லும் பகுதியை சீரமைத்து தேரை நிலைநிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைக்கும் பணிகளின்போது அந்த பகுதியை சுற்றி மின் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர் சிக்கிய பகுதி மாநகராட்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை, வாறுகால் மாராமத்து செய்யப்பட்டது.
ஆனால் தேர் செல்லும் அளவிற்கு சாலை, வாறுகால் மராமத்து செய்யப்படாததால் தேர் சிக்கியதாக கூறப்படுகின்றது. சிவகாசியில் தேர் பள்ளத்தில் சிக்கிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர் நிலைக்கு வந்தபிறகே கொடி இறக்க முடியும் என்ற நிலையில் தேரை நிலைக்கு கொண்டு வர கோயில் நிர்வாகிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
