தேனி, ஏப்.13: நீர்வரத்து தொடங்கியதால் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. இதனால், அருவிக்கு செல்ல கடந்த 27ம் தேதி வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 15 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவிக்கு செல்ல நேற்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
