திருவாடானை, ஏப்.13: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.1 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடைபெறுவது, ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுப்பது அல்லது பணம் செலுத்துவது, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பலருக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்வது.
வங்கி கணக்கு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் திடீரென தற்சமயம் அந்த வங்கிக் கணக்கில் இருந்து அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெறுவது உள்ளிட்ட செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பு செய்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளின் தகவல்கள் உடனடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வங்கி ஊழியர்கள் வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் பணம் எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கியில் அவ்வப்போது நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தையும் எவ்வாறு கண்காணிப்பது, கூடுதல் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தகவல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
