திண்டுக்கல், ஏப். 13: திண்டுக்கலில் உள்ள நத்தம் சாலையில் உள்ளாட்சி நிதி தணிக்கை துணை ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சிறுமலை பஸ் ஸ்டாப் அருகே, சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ய முயன்றனர். ஆனால் பறக்கும் படையினரை பார்த்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து சந்தேக நபர் நின்றிருந்த பகுதியை ஆய்வு செய்தபோது, அங்கு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்த தாலுகா காவல் நிலைய எஸ்ஐ கிருஷ்ணகுமார், தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகிறார்.
