கந்தர்வகோட்டை, ஏப்.13: கந்தர்வகோட்டை பகுதிகளில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கிராமங்கள் அதிக அளவில் வரண்ட பகுதி இங்கு அரசு நிலங்களிலும், குளம் கரைகளிலும் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. அம்மரங்களில் தற்சமயம் நுங்கு காய்க்க தொடங்கி உள்ளது. அதனை இப்பகுதியை சேர்ந்தவர்கள் பனைமரங்களில் ஏறி நுங்குகளை வெட்டி வந்து சாலையோரங்களில் வைத்து முழு நுங்குகளை சீவி நுங்கு சுளை களாக விற்பனை செய்து வருகிறார்கள்.
ஒரு சுளை 8முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இவர்கள் கூறும்போது எந்ததொரு ரசாயனம் மருந்தும் இல்லாமல் இயற்கையாக நமக்கு கிடைக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு ஆகும். நடப்பு காலங்களில் தென்னைக்கு கூட உரம் வைக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால் பனை மரத்திற்கு எந்த வித ரசாயன உரமும் எவரும் வைப்பதில்லை. நுங்கு சாப்பிடுவதால் உடல் வெப்பம் குறைகிறது, எனவும் வாய்புண், வாயிற்று புண்க்கு வெயில் காலத்தில் நுங்கு சிறந்தது என கூறுகிறார்கள்.
சாலையில் செல்லும் ஏழை முதல் செல்வந்தர் வரை நின்று நுங்கு வாங்கி சாப்பிட்டும் வாங்கியும் செல்லுகிறார்கள். இப்பொழுது சமூக ஆர்வலர்கள் கூறும்போது ரசாயன கலப்பற்ற இயற்கை உணவுகளை சாப்பிட முன் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். நாம் அனைவரும் அயல்நாட்டு குளிர்பானங்களை தவிர்த்து நுங்கு, இளநீர், வெள்ளாளி பிஞ்சு, தார்பூசணி, கிரிணிபழம், போன்ற நீர் சந்து உள்ளதை சாப்பிட்டால் உடல் சோர்வு இல்லாமால் இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
