விருதுநகர், ஏப். 12: விருதுநகரில் மின்வயர் மீது மரம் சாய்ந்ததால் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் பொது கழிப்பறை அருகே பட்டுப்போன மரம், மெயின் மின்சார லயன் மீது விழுந்ததில், 3 மணி நேரத்திற்கு மேலாக நேற்று மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள பிரதான டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறைவீர்கள், மின்சார லைனில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயில்வே ரோடு, மெயின் பஜார், வீராச்சாமி தெரு, ராமச்சந்திரன் தெரு, காந்திபுரம் தெரு, மாரியம்மன் கோவில் முதலான பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தடை ஏற்பட்டது. மேலும் மதுரை சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு மின்சாரம் வராததால், மோட்டார் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
