ஏழாயிரம்பண்ணை, ஏப்.12: வெம்பக்கோட்டை அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.98,280 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். சாத்தூரில் சுமார் 15க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை ஏழாயிரம்பண்ணை கழுகுமலை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனை செய்தனர். அதை ஓட்டி வந்த மணிகண்டன் என்ற டிரைவரிடம் சுமார் ரூ.98,280 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அவரிடம் இருந்த ரூ.98,280ஐ பறிமுதல் செய்து துணை தேர்தல் அலுவலர் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் பணத்திற்கு சீல் வைக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சாத்தூர் வட்டாட்சியர் வடிவேலு தெரிவிக்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பொருள் மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்களுடன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
