கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணியை ஆணையர் காந்திராஜ் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகாமக குளக்கரையில் தொடங்கிய இப்பேரணி தலைமை அஞ்சலகம், தஞ்சாவூர் சாலை என மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து காந்தி பூங்கா பகுதியில் நிறைவுபெற்றது. இப்பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நூற்றுக்கு நூறு வாக்குப்பதிவு செய்திட வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
