சேலம், ஜூலை 10: இடைப்பாடி அருகே பிறந்து 42 நாட்களேயான, ஆண் குழந்தை டானிக் கொடுக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வேம்பனேரி குட்டச்சி வளவு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 42 நாட்களுக்கு முன்பு சித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மோகித்விஜய் என பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில் குழந்தைக்கு நேற்று காலை டானிக் ஊற்றியுள்ளனர். இதில் புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு, ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது. இதனால் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
