பெரம்பூர், ஜூலை 9: கொளத்தூரில் ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம், ஏடிஎம் கார்டு திருடிய வாலிபர் போலீசாரிடம் பிடிபட்டார். கொளத்தூர் ஜிகேஎம் காலனி 23வது தெருவை சேர்ந்தவர் இந்து(35). இவர் தனது வீட்டின் அருகே இட்லி மாவு விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் 18ம் தேதி தனது பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் டிக்கியில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.2,500 எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து இந்து கொளத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பள்ளி அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், பணம் திருட்டில் ஈடுபட்ட, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொளத்தூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பிரதீப்(24) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், பிரதீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
