×

எல் நினோ தாக்கம்; பருவமழை குறையும், கடும் வெப்ப அலை ஏற்படும் – இந்தியாவுக்கு WMO எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவில் பருவமழை குறையும் என்றும், கடுமையான வெப்ப அலை ஏற்படும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்து உள்ளது. தீவிரமாக வலுப்பெற்று வரும் எல் நினோ நிலைமைகள், உலகளாவிய வெப்ப அலைகள், வறட்சி மற்றும் தீவிர வானிலை மாற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் உலக வானிலை அமைப்பு வெப்ப அலைகள், வறட்சி, கனமழை மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் வகையில், வெப்பமண்டல பசிபிக் பகுதியில் எல் நினோ’ (El Nino) சூழல் வரும் மாதங்களில் முன்பை விட வேகமாக வலுவடையும் என்று எச்சரித்துள்ளது.

WMO-வின் பொதுச் செயலாளர் செலஸ்டே சௌலோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல் நினோ சூழல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன;எண்கள் அமைப்பின் கணிப்புகள் துல்லியமாக எதிர்பார்த்தபடியே, இவை விரைவாக வலுவடைந்து ஒரு தீவிர நிகழ்வாக மாறக்கூடும்” என்று தெரிவித்துள்ளார். எல் நினோ தீவிரமடையும் நேரத்தில் உலகின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் கனமழைக்கான வாய்ப்புகளையும், நிலப்பரப்பில் வெப்ப அலைகள் (heatwaves) மற்றும் கடல் பகுதிகளில் கடல் வெப்ப அலைகள் (marine heatwaves) ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எல் நினோ சூழல்கள் பொதுவாக இந்தியாவில் குறைவான மழையை கொடுக்கின்றன. ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 40 சதவீத மழைப்பற்றாக்குறை ஏற்பட்டதற்கும், குறிப்பாக மத்திய இந்தியாவில் 50.4 சதவீத பற்றாக்குறையுடன் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதற்கும் எல் நினோ முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த வறட்சி சூழலால் நெல், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற முக்கிய பயிர்களின் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஜூலை மாதத்திலும் வழக்கமான அளவை விட 94% குறைவாகவே மழை பெய்யும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : El Niño ,WMO ,India ,Delhi ,World Meteorological Organization ,El ,
× RELATED ஒரு சில இயக்கங்களால் ஒரு...