×

பட்டுக்கோட்டையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி

தஞ்சை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முதலில் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்பு பதிவு குறித்து நகராட்சி அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் மாணவ, மாணவிகளுடன் நடந்து சென்று கலந்து கொண்டார். பேரணியில் நகராட்சி அலுவலர்கள், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு காசாங்குளத்தை சுற்றி தலைமை தபால் நிலைய சாலை, பெரியதெரு வழியாக பட்டுக்கோட்டையின் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் நாளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் சுய கணக்கெடுப்பு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனர்.

Tags : Population Census and Self-Enumeration ,Pattukkottai ,Thanjavur ,Municipality ,Population Census 2027 ,Population Census and Self-Enumeration Registration… ,
× RELATED ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை...