புதுடெல்லி: மும்பை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றிய பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டதை ெதாடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘‘ தேசிய ஆணையங்களுக்கு பரிந்துரை செய்யும் மற்றும் ஆலோசனை வழங்கும் அதிகாரத்தையே நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.
தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. புகார்களை விசாரிப்பதற்காகவும், ஆவணங்களை வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காகவும் மட்டுமே ஆணையத்திற்கு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு கிடையாது.
விசாரணையின் முடிவில் ஆணையம் தனது கண்டறிதல்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மத்திய அல்லது மாநில அரசுகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் தனது எல்லைகளை மீறி மும்பை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்குப் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது ஆகும். இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் உச்ச நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
