வேலூர், ஜூலை 29: பணியாளர்களை அடிமைகள் போல நடத்தக்கூடாது என்று, காட்பாடியில் மின்வாரிய அலுவலகம் எதிரே மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் பரசுராமன் துவக்க உரையாற்றினார். மண்டல செயலாளர் ஜோதி சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும்.விருப்ப ஊர் மாற்றம் செய்த அனைத்து கேங்மேன் பணியாளர்களையும் பணி விடுப்பு செய்திட வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் உழைப்பை அங்கீகரித்து கள உதவியாளர் மாற்றம் உடனே வழங்க வேண்டும். பணியாளர்களை அடிமைகள் போல் நடத்தக்கூடாது. கேங்மேன் பணியாளர்களை வேலை பளு இல்லாத இடங்களில் சட்டவிரோதமாக பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
