கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 23: விருதுநகரில் மூன்றாவது ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பிஸ்என்எல் ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விருதுநகரில் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புளுகாண்டி துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் நடராஜா வாழ்த்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மூன்றாவது ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். ஒய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் ஈபிஎப், ஈஎஸ்ஐ முறைப்படுத்த வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: