சென்னை: சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பி.ஆர்.அரவிந்தாக்ஷன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நமோ ஆப்’ மூலம் ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நன்கொடைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜ தலைவராக இருந்த ஜே.பி.நட்டா ஆகியோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தனர். இதில், நானும் 300 ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.
இதில் பெறப்படும் நன்கொடை மத்திய அரசின் திட்டங்களான ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவ் பேட்டி படாவோ, கிசான் சேவா ஆகிய திட்டங்களுக்கு பங்களிப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த பங்களிப்புகள் குறித்த எந்த கணக்கையும் மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, நமோ ஆப் மூலம் இதுவரை சேகரிக்கப்பட்ட நிதியின் முழு கணக்கையும் சமர்ப்பிக்குமாறு பாஜ மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும். அவர்கள் மீதும், நமோ செயலியின் தலைமை புகார் அதிகாரி அமித் மாளவியா மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஜனவரி 28ம் தேதி புகார் அளித்தேன். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் புகாரை ஆய்வு செய்ததில் அது தங்கள் விசாரணை வரம்புக்குள் வராது என்று கண்டறியப்பட்டு கடந்த பிப்ரவரி மாதமே புகார் முடித்துவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
