சங்கரன்கோவில் அருகே மலையடிபட்டியில் அகழ்வாராய்ச்சி பணி

 

சங்கரன்கோவில், ஜூலை 16: சங்கரன்கோவில் அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை ராணி குமார் எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையடிப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை டாக்டர் ராணி குமார் எம்பி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தொடர்ந்து அவர் கூறுகையில்,கடந்த திமுக ஆட்சியில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளின் மூலம் தமிழர்களின் பெருமையை உலகம் அறிந்துகொண்டது. குறிப்பாக காவேரிபூம்பட்டினம், அழகன்குளம், பட்டறைபெரும்பத்தூர், ஆதிச்சநல்லூர், கீழடியை தொடர்ந்து தற்போது மலையடிப்பட்டி கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. நுண்கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

குறிப்பாக பகடைக்காய், ஆட்டக்காய்கள், பாசிமணிகள், காதணிகள், செம்புக்காசிகள், கருப்புசிவப்பு பானைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் தங்கத்துகள்கள், மேலும் சங்க காலத்தை சார்ந்த படிக்கட்டு கிணறு உள்ளதை அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான அகழ்வாராய்ச்சி பணியாகும். இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டுமெனவும் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை பார்க்கும்போது தமிழர்களின் பெருமையும், தொன்மையும் வரலாற்றுச் சிறப்பையும் உலகிற்கு எடுக்காட்டும் அகழ்வாராய்ச்சியாக மலையடிப்பட்டி அமையும். கீழடி போல் மலையடிப்பட்டி அகழ்வாய்வை நினைவு சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது தொல்லியல்துறை அலுவலர் காளீஷ்வரன், வக்கீல் சதீஷ், ஊராட்சி தலைவர் வீரையா, மாவட்ட மகளிரணி பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: