தூத்துக்குடி, ஜூலை 10: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நேர்முகத் தேர்வு, மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருமுனை தீர்வுக்குழு கூட்டம் மற்றும் நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நேர்முகத் தேர்வு, மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவதற்காக ஒற்றை சாளர இணையதளத்தில் அனுமதி மற்றும் உரிமங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள அரசுத்துறையில் நிலுவையிலுள்ள 32 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீட்ஸ் திட்டத்தின் கீழ் உலர் சாம்பல் செங்கல் உற்பத்தி, பேவர் பிளாக் உற்பத்தி மற்றும் 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையம் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக 3 பயனாளிகளும் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு வாகனம், கால்நடை பண்ணைகள் மற்றும் இதர பயணியர் வாகனங்கள் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளும் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்காக இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
