×

ஆவடி அருகே நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ஆவடி: ஆவடி அருகே நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு கிராமம், எம்ஜிஆர் நகர் பிரதான சாலையில், 4.56 ஏக்கர் பரப்பில் கரை வகைப்பாடு கொண்ட நீர்நிலை அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. ஒரு கி.மீ., தூரம் உடைய இந்த நிலம், பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அதில், மருந்து கடை, ஜூஸ் கடை, துணிக்கடை, ஏ.டி.எம்., மையம், ஹார்டுவேர்ஸ், ஓட்டல் என பல்வேறு வணிக ரீதியிலான கடைகள் மற்றும் வீடுகள் உட்பட 105 ஆக்கிரமிப்புகள் இருந்தன. மேற்படி ஆக்கிரமிப்புகள் அகற்ற, கடந்த 2024ம் ஆண்டு செப்., மாதம் நீர்வளத்துறையில் ஏற்கனவே படிவம் – 3 வழங்கப்பட்டது.

இந்நிலையில், மேற்படி நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரி தலைமையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கினர். ஆவடி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை உத்தரவுப்படி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. அறிவிப்பு கிடைத்த ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி அதற்கான செலவு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Avadi ,Water Department ,MGR Nagar ,
× RELATED ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள்...