- சென்னை செயலகம்
- Ayyakkannu
- வேதாரண்யம்
- நாகப்பட்டினம்
- கூட்டு இயக்கம்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள்
- சென்னை
வேதாரண்யம்: பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி விரைவில் சென்னை தலைமை செயலகம் முன் நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த 4ம்தேதி நடந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சிமுளையை சேர்ந்த விவசாயி சோமு (எ) சோமசுந்தரம்(67) கடந்த 5ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சொந்த ஊர் திரும்பினார்.
ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சோமசுந்தரம் வீட்டுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற பயிர்க்கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையை எண்ணி வருந்தி மனவேதனை காரணமாக விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சோமசுந்தரம் உடல் தகனம் செய்யப்பட்ட சுடுகாட்டுக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் தனபால் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை சென்றனர்.
அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைதொடர்ந்து அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில், ‘‘சோமசுந்தரம் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விரைவில் சென்னை தலைமை செயலகம் முன் 111 விவசாயிகள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.
