போடி, ஜூலை 6: போடியில் ஏலக்காய் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி வஉசி நகர், வடக்கு தெருவை சேர்ந்தவர் தன்வந்தன் (44). ஏலக்காய் விற்பனை நிறுவன உரிமையாளர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்தபின்னர், நிறுவனத்தை அடைத்துவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் அடுத்தநாள் காலை 6.30 மணியளவில் இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் வந்தபோது, அங்கு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தன்வந்தனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் அங்கு சென்று தன்வந்தனின் பெற்றோர் பார்த்தபோது, லாக்கரிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், ஆவணங்கள் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளைடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போடி காவல் நிலைய எஸ்ஐ குரு கவுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
