பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

சென்னை: தமிழகத்தில் பக்ரீத் மட்டுமின்றி பிற நாட்களிலும் பொது இடங்களில் மாடு, கன்றுகுட்டிகள் வெட்ட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மே 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலர் சூர்யபிரசாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது.

விசாரணையின் முடிவில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாடுகளை பலியிட வேண்டும். பொது இடங்களில் பலியிட கூடாது என்று உத்தரவிட்டது. பக்ரீத் பண்டிகைக்கு ஒருநாள் முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

ஆனால் தமிழக அரசு மவுனமாக இருந்து வந்தது. சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் பக்ரீத் மற்றும் பிற நாட்களில் பொது இடங்களில் பசுமாடு, கன்றுகள் பலியிட தடை விதித்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  அதில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதன்பிறகு மொத்தமாக இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: