×

தமிழகத்தில் அரிசி விலை கிலோ-விற்கு ரூ.10 வரை உயர்வு.!! உச்சம் தொட்ட சீரக சம்பா விலை

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. போதிய மழையின்மை, நெல் விளைச்சல் குறைவு உள்ளிட்டவையே அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இது தவிர லாரி வாடகை கட்டணம் 25% உயர்ந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசி விலையும் அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை, 21 லட்சம் டன்னாக உள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் ஆண்டுக்கு, 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு கர்நாடகாவில் சில இடங்களில் மழை இல்லாததால், உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதித்துள்ளது. இதனிடையே அதிக அளவில் ஏற்றுமதியாகும் சீரக சம்பா அரிசி கடந்த ஆண்டு 1 கிலோ ரூ.84-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.180-க்கு விற்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கோடை மழை மற்றும் பருவமழை கை கொடுக்காததால், கோடை மகசூல் மற்றும் குறுவை சாகுபடி பொய்த்து வருகிறது. குறிப்பாக தமிழக, கர்நாடகா அணைகளில் நீர் குறைவாக உள்ளதால், குறுவை சாகுபடி வெகுவாக பாதிக்கும் சூழல் நிலவுகிறது. அதே போல அரிசி தட்டுப்பாடு காரணமாக, சில்லரை விற்பனையில், கூடுதல் விலை வைத்தும் சிலர் விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் உயர்வு