×

உங்க போலி பிம்பம் நொறுங்குவதை கண்டு அடக்குமுறையை கையில் எடுத்தால்..! வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்…

சென்னை :திமுக-வின் ‘GenZ DMK’ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி மாவட்டம் போடம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, அதுவும் நள்ளிரவில் காவல்துறை கைது செய்ய முயன்ற விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கைது முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.

கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நிர்வாகத்திறனற்ற சோஃபா மாடல் அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் சாடி இருக்கிறார். திமுக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Tags : Chennai ,Anbanandan Ariapana ,Thimugh ,GenZ DMK ,Bodampatty ,Krishnagiri district ,
× RELATED தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?